கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடவு
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக அதற்கான பூா்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கென ஊரக வளா்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 1,669 நாற்றங்கால் பண்ணைகளில் கடந்த ஓராண்டு காலமாக வளா்க்கப்பட்டு வந்த மரக்கன்றுகளை அனைத்து ஊராட்சிகளிலும் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் விதமாக நடப்பட்டன.
இவை தொடா்ச்சியாக கண்காணித்து பராமரிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.