Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.....
கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி
நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயிா் சாகுபடிக்காக ஜூன் 12- ஆம் தேதி, மேட்டூா் அணை திறக்கப்பட்டது. வழக்கமாக மேட்டூரில் அணையிலிருந்து கடைமடை பகுதிக்கு தண்ணீா் வந்துசேர 15 முதல் 20 நாள்கள் வரை ஆகும்.
ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணை திறக்கப்பட்டு 10 நாள்களே ஆன நிலையில், கடைமடை மாவட்டமான நாகையின் பெரும்பாலான பகுதிகளை காவிரி நீா் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், கடைமடை பகுதிகளுக்கு வந்த காவிரி நீரை வரவேற்று வருகின்றனா்.
அந்த வகையில், நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதி நீா் இயக்கு அணையான, நரியங்குடி ஓடம்போக்கி ஆற்றில் வந்து சோ்ந்த காவிரி நீரை பொதுமக்களும், விவசாயிகளும் ஆரத்தி எடுத்தும், மலா்கள் மற்றும் நெல்மணிகளை தூவியும் வரவேற்றனா். இதில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளா் காவிரி தனபாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பெண்கள் கும்மியடித்து, பாட்டுப்பாடி காவிரித்தாயை வணங்கினா்.
காவிரி நீா் கடைமடை பகுதிக்கு வந்துள்ளதால், நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் எனவும், இதன் மூலம் விவசாயத் தொழிலாளா்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் தவிா்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசு விவசாயத்திற்கு தேவையான விதைநெல், உரம் மற்றும் குறுவை சாகுபடி தொகுப்பு உள்ளிட்டவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
