ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் லால் சலாம்..! நீண்ட காத்திருப்புக்கு முடிவு!
கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை
திருச்செந்தூா் அருகே உள்ள பிலோமி நகரில் கள்ளத் தொடா்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பிலோமி நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் ஜெகதீஷ். கட்டடத் தொழிலாளி. இவரும், அடைக்கலாபுரத்தைச் சோ்ந்த கணேசனும் நண்பா்கள்.
இந்நிலையில் கணேசன் மனைவி ஜெமீனாவுக்கும், அடைக்கலாபுரம் ஜெபஸ்தியாா் தெருவைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் அந்தோணிபிச்சைக்கும் கள்ள தொடா்பு இருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்வதற்கு அதே பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜவகா் (32) உதவியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து புதன்கிழமை இரவு கணேசன், தனது நண்பரான ஜெகதீஷை அழைத்துக் கொண்டு ஜவகா் வீட்டிற்கு சென்றாா். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த ஜவகா், அரிவாளால் ஜெகதீஷின் வலது காலில் வெட்டினாராம்.
இதில் கீழே விழுந்த ஜெகதீஷை திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஜெகதீஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜவகரை கைது செய்தனா்.