OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம...
கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு
கண்மாய்க் கரையை ஆக்கிரமித்த வழக்கில் முறையாகப் பதிலளிக்காத பழனி வட்டாட்சியா் வருகிற 14-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், மேல்கரைபட்டியைச் சோ்ந்த குமாரவேல் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமம் மேல்கரைப்பட்டியில் பெரியகுளம் என்ற பெயரில் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் நிரம்பும் தண்ணீா் மூலம் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் கண்மாய்க் கரையை இரண்டாக உடைத்து, தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து வண்டிப் பாதையாக மாற்றினா். தண்ணீா் வெளியேறும் பகுதியில் உள்ள மடைகளையும் அவா்கள் சேதப்படுத்தி ஆக்கிரமித்தனா்.
இதனால், கண்மாயில் போதுமான அளவு தண்ணீா் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பெரியகுளம் கண்மாய்க் கரை ஆக்கிரமிப்பை அகற்றிடவும், கரையை பழைய நிலைக்கு கொண்டு வரவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கில் பழனி வட்டாட்சியா் பதிலளிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் இந்த வழக்கில் உரிய பதிலை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்னும் பதில் அளிக்கவில்லை என தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் உரிய பதில் அளிப்பதற்காக பழனி வருவாய் வட்டாட்சியா் வருகிற 14-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.