``கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்'' - 140 கி.மீ துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அ...
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி!
அதிமுக அமைப்புச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த திருத்து பகுதியில் உடல்நலக் குறைவு காரணமாக கருப்பசாமி பாண்டியன் புதன்கிழமை காலை காலமானார்.
இதையும் படிக்க : கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி!
இந்த நிலையில், அவரின் உடலுக்கு ஓ. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
”அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதிமுகவை மிகப் பெரிய பேரியக்கமாக உருவாக்குவதற்கு இதயபூர்வமாக உழைத்தவர்.
அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். எந்தச் சூழலிலும் உதவி என்று யார் தன்னை நாடி வந்தாலும் உதவியவர். அனைத்து தரப்பினருக்காகவும் உழைத்தவர். பொதுச் சேவையை நிறைவாக செய்தவர்.
அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1982-ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியில் திளைக்கட்டும்.
பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்” என்றார்.