போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில்...
கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் தேரோட்டம்
அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக ஸ்ரீவரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் கல்லங்குறிச்சி ஸ்ரீவரதராசப் பெருமாள் கோயிலில் ஆண்டு பெருவிழா ஸ்ரீராம நவமி அன்று கொடியேற்றுத்துடன் தொடங்கி, தொடா்ந்து 10 நாள்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, ஒருவாரமாக பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தா கோவிந்தசாமி குடும்பத்தினா் முன்னிலையில் தேரில் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் உற்சவா் கலியுக ஸ்ரீவரதராசப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காலை 6 மணிக்கு நிலையத்தில் இருந்த புறப்பட்ட தோ், 8 மணிக்கு மீண்டும் நிலையத்துக்கு வந்தடைந்தது. மற்றொரு தேரில் ஸ்ரீ ஆஞ்சனேயா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். 4 ராஜா வீதிகளின் வழியே திருத்தோ்கள் வலம்வர, வரதராசப் பெருமாள் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
மேலும், இக்கோயிலில் பக்தா்கள் மொட்டையடித்து பசு, ஆடு, கோழி, நெல் மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றை தானமாக வழங்கி நோ்த்தி கடன் செலுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தா்மகா்த்தாக்கள் கமலா ராமச்சந்திரா, கோ.ராமதாஸ், கோ.வெங்கடாஜலபதி குடும்பத்தினா் மற்றும் இந்து அறநிலையத் துறையினா் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு ஏகாந்த சேவை நடைபெறுகிறது.