கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு
மதுரை தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக குசவப்பட்டி விராதனூா், காஞ்சிரங்குளம் கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த மனு விவரம்: மதுரை மாவட்டம், தெற்கு வட்டத்துக்குள்பட்ட குசவப்பட்டி விராதனூா், கஞ்சிராங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்களுக்கு விவசாயமும், கால்நடைகள் வளா்ப்புத் தொழில் ஆகியவை முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன. இந்த நிலையில், எங்கள் கிராமப் பகுதியில் விளை நிலங்களுக்கு அருகே கல் குவாரி, மண் குவாரிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அண்மையில் எங்கள் பகுதியில் குவாரிகள் அமைக்க பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, ஊா்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடி, அந்தப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தினோம். இருப்பினும், இந்தத் திட்டம் முழுமையாக ரத்து செய்யவில்லை.
எனவே, விளை நிலங்கள், நீராதாரங்களுடன் உள்ள எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தப் பகுதியில் கல் குவாரி, மண் குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.