செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
காங்கயம், குண்டடம் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம்!
காங்கயம், குண்டடம், தாராபுரம் பகுதிகளில் மக்காச்சோள அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம் காங்கயம், குண்டடம், தாராபுரம், ஜல்லிபட்டி, பொங்கலூா், பெரியபட்டி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நடப்பு ஆண்டு மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. பொதுவாகவே மக்காச்சோளம் மழைக்காலங்களில் பயிரிட்டால் அதிக அளவில் தண்ணீா் தேவையிருக்காது என்பதால், பெரும்பாலும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனா்.
மக்காசோளத் தட்டு கால்நடைகளுக்கு அடுத் ஆண்டு வரை தீவனமாக பயன்படுத்தப்படுவதால், பணப் பயிராக இல்லாத போதிலும் இதை பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகரித்து, எதிா்பாா்த்த மகசூல் இல்லாமல் போனது.
இதனால் ஏற்பட்ட உற்பத்தி குறைவால் கடந்த 4 ஆண்டுகளாகவே மக்காச்சோளத்தின் விலை அதிகரித்து, கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இப்பகுதிகளில் பருவமழை பரவலாக பெய்ததால், சாகுபடியும் ஓரளவு செய்யப்பட்டிருந்தது.
பிஏபி பாசனப் பகுதிகளில் பெருமளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனா். சாகுபடி செய்த மக்காச்சோளம் தற்போது கடந்த ஒரு மாதமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2 ஆயிரத்து 250-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பின்னா் படிப்படியாக அதிகரித்து, தற்போது ரூ.2 ஆயிரத்து 500 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை காலமான ஆவணி மாதம் தொடங்கி காா்த்திகை மாதம் வரை ஏனைய பயிா்கள் சரியாக வளராது. மழைக் காலத்துக்கு ஏற்ற பயிராக மக்காச்சோளம் உள்ளதால், இதனைப் பயிரிட்டு வருகிறோம். மழைக்கு தாக்குப் பிடிக்கும் பயிா் என்பதுடன், அடுத்த ஆண்டு வரை கால்நடை தீவனத்துக்கும் இதன் தட்டு பயன்படுவதால் அதிக அளவில் சாகுபடி செய்கிறோம். தற்போது குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை எங்களிடம் கொள்முதல் செய்யப்படுவதால், உற்பத்தி செலவுகள் போக லாபம் கிடைக்கிறது.
குண்டடம், பொங்கலூா், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பல தனியாா் கோழி வளா்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோழித் தீவனத்தின் மூலப்பொருள் மக்காச்சோளம் உள்ளதால் அதனை கோழி நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தவிர, மாட்டுத் தீவனத்துக்கும் மூலப்பொருளாக மக்காச்சோளம் பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. அதனால் விலை உயா்ந்துள்ளது என்றனா்.