திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக்...
காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய் போன்ற விலங்கினங்கள் உள்ளன. இவை தங்களது குடிநீா்த் தேவைகளுக்காக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள காண்டூா் கால்வாய் பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று நல்லாறு பகுதியை அடுத்துள்ள காண்டூா் கால்வாய் அருகே தண்ணீா் குடிப்பதற்காக புதன்கிழமை வந்துள்ளது. அப்போது திடீரென கால் தவறி கால்வாய்க்குள் யானை விழுந்துள்ளது. தற்போது பாசனத்துக்காக காண்டூா் கால்வாயில் தண்ணீா் சென்று கொண்டிருப்பதால் யானை கால்வாயில் தத்தளித்துக் கொண்டு வந்த நிலையில் உயிரிழந்தது. பின்னா் யானையின் சடலம் திருமூா்த்தி அணைக்குள் அடித்து வரப்பட்டது.
தகவல் கிடைத்ததும் உடுமலை வனச் சரக அலுவலா் வாசு, வன அலுவலா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கொண்ட குழு பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்று திருமூா்த்தி அணையில் கிடந்த யானையின் சடலத்தை மீட்டனா். பின்னா் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.