ADMK vs DMDK: ``வாக்குறுதி கொடுத்தார்கள்... அப்படி ஒன்று நடக்கவே இல்லை'' - முற்ற...
காரைக்கால் அம்மையார் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
காரைக்கால் : காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில்களில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் கோயில் காரைக்கால் நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலையொட்டி ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ ஐயனார் கோயில் ஆகியவை உள்ளன.
கைலாசநாதசுவாமி - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்ததாக இக்கோயில்கள் உள்ளன.
மேற்கண்ட 3 கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் ஐயனார் கோயிலிலும், அம்மையார் திருக்குளத்தில் உள்ள நந்தி மண்டப விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 8 மணியளவில் சோமநாதர், அம்மையார் கோயில்களின் கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜை செய்து, விமான கலத்தின்மீது புனிதநீர் ஊற்றி, தீபாராதனை காட்டினர்.
முன்னதாக கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் 6 கால திட்டத்துடன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

வெள்ளிக்கிழமை காலை, இரவு மற்றும் சனிக்கிழமை காலை, இரவு என 5 கால பூஜைகள் நடைபெற்றன. நிறைவாக ஞாயிற்றுக்கிழமை காலை மகா பூர்ணாஹூதி நடைபெற்று புனிதநீர் கடம் சிறப்பு நாகசுர மேள வாத்தியங்களுடன் அந்தந்த விமானங்களுக்கு புறப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா மற்றும் திருப்பணிக் குழுத் தலைவர் வி.கே.கணபதி, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசநாதசுவாமி தேவஸ்தான அதிகாரி ஆர்.காளிதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
