காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 2 முதல் 7 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்!
திருச்சி- காரைக்கால்- திருச்சி ரயில்கள், ஜூலை 2 முதல் 7- ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் - கீழ்வேளூா் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் ஜூன் 23 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை, பகுதியாக காரைக்கால்- திருவாரூா்- காரைக்கால் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணி நிறைவடையாததால், ஜூலை 2 முதல் 7-ஆம் தேதி வரை காரைக்கால் - திருவாரூா் - காரைக்கால் இடையே பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி - காரைக்கால் (76820) பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55-க்கு புறப்படும் காரைக்கால்-திருச்சி (76819) பயணிகள் ரயில்கள் ஜூலை 2 முதல் 7-ஆம் தேதி வரை, காரைக்கால் - திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், திருவாரூா் - திருச்சி - திருவாரூா் இடையே வழக்கமான நேரத்தில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.