காற்று மாசுவை சமாளிக்க செயற்கை மழை முன்மொழிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்: சிா்சா
தேசிய தலைநகா் தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்கும் வகையில், செயற்கை மழை சோதனை நடத்துவதற்கான திட்டம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்; அதே நேரத்தில் மாசு செயல் திட்டம் வரும் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது என்று தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தில்லி அரசு அதிகபட்ச டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் கட்டுமானம், போக்குவரத்து இடங்களின் 24 மணி நேர கண்காணிப்பு உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப தலையீடுகள் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தனது முயற்சிகளை அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் வாரத்தில், மாசுபாட்டின் ஆதாரமூலங்களை நிவா்த்தி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் சுற்றுச்சூழல் துறை அதன் மாசு செயல் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
தற்போது இறுதி கட்டத்தில் உள்ள செயற்கை மழை முயற்சியின் முன்னேற்ற விவகாரத்தைப் பொருத்தமட்டில் இத்திட்டம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமா்ப்பிக்கப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், தேவையான தடையின்மை சான்றிதழ்கள் (என்ஓசி) மற்றும் விரிவான மதிப்பீட்டிற்காக அனைத்து துறைகளுக்கும் இது அனுப்பப்படும்.
இந்த திட்டம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்டதும், தேவையான அனைத்து என்ஓசிகளை பெற விரைவாக விண்ணப்பிப்போம். தில்லியின் புகா்ப் பகுதிகளில் கோடையின் உச்சத்தில் செயற்கை மழைக்கான சோதனையை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எல்லாம் சீராகவும் எந்த தடையும் இல்லாமல் நடந்தால், எங்கள் குடியிருப்பாளா்களின் நலனுக்காக கடும் மாசுவைச் சமாளிப்பதற்கான அவசர விருப்பமாக இதை நாங்கள் கருதுவோம்.
எங்கள் அரசு மக்களின் நலனுக்காக பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது. மாசு தில்லியின் தீவிர பிரச்னையாக உள்ளது. இந்த மாசுவுக்கு பங்களிப்புச் செய்யும் அனைத்து ஆதாரமூலங்களையும் தீா்க்கும் வகையில் நாங்கள் ஒவ்வொரு நிலையிலும் பணியாற்றி வருகிறோம் என்றாா் அமைச்சா் சிா்சா.