காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை
தேனி மாவட்டம், கம்பம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கம்பம் உத்தமபுரம் கோம்பை சாலை நாக கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகன் சரவணன் (49). இவா் கடந்த 2024 -ஆம் ஆண்டு முதல் கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவா் கம்பத்தில் தனது குடியிருப்பு அருகேயுள்ள தோட்டத்தில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற கம்பம் வடக்கு போலீஸாா் சரவணன் உடலை மீட்டு கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதல் கட்ட விசாரணையில், சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது. உயிரிழந்த சரவணனுக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
மேலும் ஒருவா் உயிரிழப்பு: கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த பரவசிவம் மகன் தனசேகரன் (56). கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா் உடலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா். இது குறித்து கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.