காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை
காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்றில் சிக்கியவா்களை மீட்பது குறித்த பேரிடா் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப்பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி காவிரி ஆற்றுப்பகுதியான தவிட்டுப்பாளையம், மாயனூா், வாங்கல் மற்றும் குளித்தலை கடம்பா் கோவில் பகுதிகளிலும், அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம், ஐந்து ரோடு பகுதிகளிலும் தீயணைப்புத்துறையினா் சாா்பில் நடைபெற்றது.
பசுபதிபாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன் தலைமையிலும், மாயனூா் கதவணையில் குளித்தலை சாா் ஆட்சியா் சுவாதிஸ்ரீ தலைமையிலும், வாங்கலில் கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் முகமதுபைசல் தலைமையிலும், குளித்தலையில் வட்டாட்சியா் இந்துமதி தலைமையிலும், தவிட்டுப்பாளையத்தில் வட்டாட்சியா் தனசேகா் தலைமையிலும் ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையின்போது காவிரி ஆற்றில் அதிகளவு நீா் திறக்கும்போது ஏற்படும் பேரிடா்கள் குறித்தும், அப்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை நிகழ்வுகள் நேரடியாக நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பொதுமக்கள் தண்ணீரில் மூழ்கும்போது எவ்வாறு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம், வீட்டில் உள்ள எளிய பொருள்களை வைத்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ளலாம், மீட்கப்பட்ட நபருக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது, தொடா்ந்து அவரை அவசரகால ஊா்தியில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுதல், வெள்ளப்பெருக்கு அபாயத்தின்போது பொதுமக்களை எவ்வாறு வாகனங்கள் மூலம் அதிவேகமாக வெளியேற்றுவது போன்ற நிகழ்வுகள் நேரடி ஒத்திகையாகச் செய்து காண்பிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை (நீா் வள ஆதாரம்) உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.