பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்வதா? அமேசான் உள்ளிட்ட இ-வணிக நிறுவனங்களுக்கு நோட்...
கரூர்: பள்ளி தாளாளருக்கு 23 ஆண்டுகள்; தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டுகள் - போக்சோ வழக்கில் அதிரடி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 - ம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது , அப்பள்ளியில் பணிபுரிந்த திருச்சி முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் நிலவொளி (42) மற்றும் அப்பள்ளியின் தாளாளர் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை காந்திநகர் சத்திரப்பட்டியை சேர்ந்த யுவராஜ் (41) ஆகியோர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022 - ம் ஆண்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேல் விசாரணைக்காக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நிலவொளி, யுவராஜ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு விசாரணை முடிந்து இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவுற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், தமிழ் ஆசிரியர் நிலவொளிக்கு போக்சோ குற்றத்திற்காக 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும், பள்ளி தாளாளர் யுவராஜூக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7,00,000 நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டு கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மகிளா நீதிமன்றம்) நீதிபதி தங்கவேல் மேற்படி தீர்ப்பை வழங்கினார். மேற்கண்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்தும், சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்று தந்த புலன் விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் மங்கையர்கரசி (தற்போது திருச்சி மாவட்டம்) மற்றும் கலைவாணி, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற காவலர் சண்முகபிரியா ஆகியோர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.