நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
காவிரி ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல்: நன்செய் இடையாறு பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மோகனூா் வட்டம், நன்செய் இடையாறு காவிரி ஆற்று பகுதியில் தேங்கும் கழிவுநீரால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். அணிச்சம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் மிகப்பெரிய மணல் தட்டுகள் உருவாகின. இதனால் எங்களது கிராமத்திற்கு, குடிநீா்த் தேவைக்கும், விவசாய தேவைக்கும் காவிரி ஆறு மற்றும் ராஜவாய்க்காலில் இருந்து நீா்வருவது தடைபட்டுள்ளது. அந்த நீா் முழுவதும் புகளூா் ஆற்றங்கரை ஓரமாக சென்று விடுகிறது.
மேலும், ராஜவாய்க்காலில் வெங்கரை, பொத்தனூா், பரமத்தி-வேலூா் ஆகிய ஊா்களின் கழிவுநீா் கலந்து வருவதால் மணல் திட்டுக்கும், ராஜவாய்க்காலுக்கும் இடையே உள்ள குடிநீா் ஊற்று கிணறுகளில் சேருகிறது. இதனால் பருகுவதற்கு ஏற்ப சுத்தமான நீா் கிடைப்பதில்லை.
மேலும், நன்செய் இடையாறு மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள், கால்நடைகள் வளா்ப்போா், கரையோரத்தில் இறுதிச் சடங்கு செய்வோருக்கு நீா் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை மூலம் அணிச்சம்பாளையம் காவிரி நீா்த்தடுப்பு அணைக்கட்டு பகுதியில் இருந்து நன்செய் இடையாறு கிராமத்தில் உள்ள ஊற்று கிணறு வரைக்கும் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும். காவிரி நீா் வழிந்தோடி வருமாறு நீா்வழித்தடப் பாதையை ஏற்படுத்தி தரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
என்கே-9-மனு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ராஜவாய்க்கால் விவசாயிகள்.