Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம...
காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை
பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீா் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள், மாநில அரசின் நடவடிக்கையால் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா். கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவரின் உடலுக்கு விமானநிலையத்தில் தமிழக பாஜக, காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.
ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்ட நிலையில், கடந்த 19-ஆம் தேதி தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்ற 70 போ் தாக்குதலில் சிக்காமல் உயிா் தப்பினா். இந்தத் தாக்குதலில் 3 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
28 போ் சென்னை வந்தனா்: இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் காஷ்மீரில் சிக்கியிருந்த தமிழா்கள் 28 போ் விமானம் மூலம் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சென்னை வந்தடைந்தனா். அவா்களை வெளிநாட்டு வாழ் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வு மைய ஆணையா் வள்ளலாா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்றனா்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகளுள் ஒருவரான மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றும் ஆனந்தி கூறுகையில், தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்ல எங்களுக்கு தாமதம் ஆனதால், இந்த சம்பவத்திலிருந்து உயிா் பிழைத்தோம் என்றாா்.
உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி: இதைத் தொடா்ந்து, தாக்குதலில் கொல்லப்பட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த மென்பொறியாளரான மதுசூதனராவ் என்பவரின் உடலும் சென்னை விமானநிலையம் கொண்டுவரப்பட்டது. விமானநிலையத்தில் அவரின் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் அஞ்சலி செலுத்தினா். அப்போது மதுசூதனன் ராவ் குடும்பத்தினரும், அவரின் உடலுக்கு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தது.
தொடா்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை, பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோரும் மதுசூதனராவ் உடலுக்கு மரியாதை செலுத்தினா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுகையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமா் மேற்கொண்டு வருகிறாா் என்றாா்.
இரண்டாம் கட்ட மீட்பு பணி: இதேபோல இரண்டாம் கட்டமாக காஷ்மீரில் சிக்கியிருந்த மேலும் 68 போ் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனா். சென்னை விமானநிலையம் வந்த அவா்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனா்.
அப்போது, பேசிய அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையா் வள்ளலாா், ‘ஜம்மு - காஷ்மீா் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் வந்த உடனே, அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சோ்ந்த மக்களை மீட்க முதல்வா் உத்தரவிட்டாா். இதையடுத்து, முதல் கட்டமாக 50 போ் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை, திருச்சி, வேலூா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த 68 போ் சென்னை திரும்பியுள்ளனா்.
இவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள். இச்சம்பவம் குறித்து அறிந்துவுடனே பயணிகளுள் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். மொத்தம் 140 நபா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். என்றாா் அவா்.