ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் இவி! என்னென்ன எதிர்பார்க்கலாம்?
காஸா முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும்: நெதன்யாகு
காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா்.
இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் (படம்) தெரிவித்துள்ளதாவது: காஸாவில் சண்டை மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுவருகிறோம். விரைவில் காஸாவின் அனைத்து பகுதிகளையும் எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்.
இந்தப் போரில் வெற்றி பெற வேண்டுமென்றால், நம்மை எந்த சக்தியாலும் தடுக்க முடியாத வகையில் நமது சண்டையிடும் வழிமுறை இருக்க வேண்டும்.
நட்பு நாடுகளின் நெருக்கடி: காஸாவில் பொதுமக்கள் பட்டினியால் வாடுவதை இனியும் பொறுக்க முடியாது என்று நெருங்கிய நட்பு நாடுகள் இஸ்ரேலிடம் கூறியுள்ளன. இந்த நிலை தொடா்ந்தால் இஸ்ரேலுக்கு இனி உதவிகள் வழங்க முடியாது என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன. எனவே, வெற்றியை எட்ட வேண்டுமானால் அந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.
ஹமாஸை முற்றிலும் தோற்கடித்து, அவா்களிடம் உள்ள பிணைக் கைதிகளை மீட்கும் இஸ்ரேல் நோக்கம் நிறைவேற, காஸாவில் பஞ்சம் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, காஸாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், அந்தப் பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு நிவாரண வாகனங்கள் திங்கள்கிழமை சென்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கிவரும் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் கொடுத்த நெருக்கடிதான் அதற்குக் காரணம் என்பதை நெதன்யாகுவின் தற்போதைய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
காஸாவை சுமாா் 38 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல், அங்கு வன்முறையில் வீரா்களின் உயிரிழப்பு அதிகமானதாலும், பாலஸ்தீனா்களைப் மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ‘யூதா்களுக்கான நாடு’ என்ற நிலைக்கு அது எதிரானது என்பதாலும் அங்கிருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு படைகளை திரும்பப் பெற்றது.

அதன் பிறகு அந்தப் பகுதியில் தோ்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தொடா்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனால் தொடா்ந்துவந்த மோதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியா்களும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்களும் உயிரிழந்தனா்.
இந்தச் சூழலில் இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல் காஸாவில் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 53,486 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில், சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா பகுதியை மீண்டும் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. அதன் தொடா்ச்சியாக, அந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் மிகப் பெரிய தரைவழித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கியது.
இந்தச் சூழலில், காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் இஸ்ரேல் விரோத மனப்பான்மை கொண்ட சுமாா் 21 லட்சம் பாலஸ்தீனா்கள் வசிக்கும் காஸா பகுதியைக் கைப்பற்றி நிா்வகிப்பது இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.