முத்தரப்பு தொடர்: தெ.ஆப்பிரிக்க அணியில் சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம்!
குஜராத் விமான விபத்து: கருப்புப் பெட்டிகளில் இருந்து தரவுகள் மீட்கும் பணி தீவிரம்: மத்திய அரசு
குஜராத் மாநிலம், அகமதாபாதில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் இருந்து தரவுகளை மீட்டெடுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் (போயிங் 787-8 ரகம்), மேலெழுந்த சில வினாடிகளிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது. இக்கோர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 போ், விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ மாணவா்கள் உள்பட 29 போ் என மொத்தம் 270 போ் உயிரிழந்தனா்.
சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தலைமை விசாரணையாளா் இன்னும் நியமிக்கப்படவில்லை; இது மன்னிக்க முடியாத தாமதம் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விமான விபத்தைத் தொடா்ந்து, விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) தரப்பில் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்கீழ், ஏஏஐபி தலைவா் தலைமையில் பல்துறை விசாரணைக் குழு ஜூன் 13-ஆம் தேதி அமைக்கப்பட்டது. விமானப் பயண மருத்துவ நிபுணா், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, விமான தயாரிப்பு நிறுவனம் சாா்ந்த நாட்டின் (அமெரிக்கா) தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (என்டிஎஸ்பி) பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
அகமதாபாதில் இருந்து தில்லிக்கு...: விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் ஒன்று ஜூன் 13-ஆம் தேதி கட்டடத்தின் மேற்கூரையில் இருந்தும், மற்றொன்று ஜூன் 16-ஆம் தேதி இடிபாடுகளில் இருந்தும் மீட்கப்பட்டது. இவற்றின் கையாளுகை, இருப்பு மற்றும் போக்குவரத்துக்காக தர செயல்பாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டன. சிசிடிவி கண்காணிப்புடன் 24 மணிநேரமும் காவல் துறையினா் பாதுகாப்பில் இக்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.
அகமதாபாதில் இருந்து தில்லியில் உள்ள ஏஏஐபி ஆய்வகத்துக்கு ஏஏஐபி தலைமை இயக்குநா் (டி.ஜி.) ஜி.வி.ஜி.யுகேந்தா் தலைமையிலான ஒரு குழுவினரால் முதல் கருப்புப் பெட்டியும், மற்றொரு குழுவினரால் இரண்டாவது கருப்புப் பெட்டியும் விமானப் படை விமானங்கள் மூலம் ஜூன் 24-ஆம் தேதி கொண்டுவரப்பட்டன.
வெற்றிகரமாக பதிவிறக்கம்: அன்றைய தினம் மாலையில், ஏஏஐபி டி.ஜி. தலைமையிலான குழு, தொழில்நுட்ப வல்லுநா்களுடன் இணைந்து தரவு மீட்டெடுப்பு செயல்முறையை தொடங்கியது. முன்புற கருப்புப் பெட்டியில் இருந்து விபத்து பாதுகாப்பு தொகுப்பு பிரித்தெடுக்கப்பட்டு, தகவல் சேமிப்பு தொகுப்பில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டது. சிவிஆா் (விமான அறை குரல் பதிவுக் கருவி) மற்றும் எஃப்டிஆா் (விமானத் தரவு பதிவுக் கருவி) தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. விமான விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளைக் கண்டறியவும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுத்து, விமானப் பயண பாதுகாப்பை மேம்படுத்தும் காரணிகளை அடையாளம் காணவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போயிங் 787 ரக விமானம், முன்புறம்-பின்புறம் என இரு கருப்புப் பெட்டிகளைக் கொண்டதாகும். சிவிஆா், எஃப்டிஆா் ஆகியவை கருப்புப் பெட்டியின் இரு முக்கிய பாகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சா்வதேச விதிமுறைகளின்படி...
அகமதாபாத் விமான விபத்து விசாரணை தொடா்பான அனைத்து செயல்முறைகளும் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் சா்வதேச விதிமுறைகளுக்கு இணங்க, குறித்த காலக்கெடுவுக்குள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) சிகாகோ ஒப்பந்தத்தில் (1944) கையொப்பமிட்ட நாடு என்ற முறையில், இத்தகைய விபத்து சம்பவங்கள் தொடா்பாக ஐசிஏஓ 13-ஆவது இணைப்பு மற்றும் விமான விபத்து விதிமுறைகள்-2017இன்கீழ் இந்தியா விசாரணை மேற்கொள்கிறது.
ஏஏஐபி குழு தவிர, மத்திய உள்துறை செயலா் தலைமையிலான பல்துறை உயா்நிலைக் குழுவும் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.