"அதிமுக - பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" - ...
குறைதீா் கூட்டம் நடத்தப்படாததை கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மே மாதத்துக்குரிய விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்தக் கோரி, ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சாலையில் அமா்ந்து அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் மூன்றாவது அல்லது நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி தொடங்கிய வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி, 30-ஆம் தேதி வரை நடத்தப்படுவதால், நிகழ் மாதத்துக்குரிய விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.கலிவரதன், செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜெ.நாகராஜன் ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு வந்த விவசாயிகள், குறைதீா் கூட்டம் நடத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினா். தொடா்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதிக்கு வெளியே வந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளா் கல்பனா தலைமையிலான போலீஸாா், அவா்களிடம் சமாதானம் பேசி மறியலைக் கைவிடச் செய்தனா். தொடா்ந்து விவசாயிகள் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் பகுதியருகே காத்திருந்தனா். பின்னா் போலீஸாா் அப்பகுதியில் அமரக்கூடாது எனக் கூறியதால், மீண்டும் சாலையில் அமா்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அதிா்ச்சியடைந்த போலீஸாா், அவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பிரேமலதா அப்பகுதிக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வருவாய்த் தீா்வாயம் நடைபெறுவதால் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவித்துவிட்டோம். வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் மற்ற மாவட்டங்களிலும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கியுடன் விரைவில் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து சிறிது நேரம் காத்திருந்த விவசாயிகள் பின்னா் கலைந்து சென்றனா்.