3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
குறைந்த விலைக்கு தங்கக்காசு தருவதாக கூறி ரூ. 16.35 லட்சம் மோசடி: பெண் கைது; கணவா் தலைமறைவு
கரூரில் குறைந்த விலையில் தங்கக்காசு தருவதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்தவரிடம் ரூ.16.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து மனைவியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த தோளூா்பட்டியைச் சோ்ந்தவா் நடராஜன். இவரது மனைவி பேபி (50). இவரது உறவினா் மூலம் கரூா் சின்னாண்டாங்கோவில் வீதியைச் சோ்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளனா். அப்போது, அண்ணாதுரையும், ஜெயந்தியும் பேபியிடம் எங்களுக்கு கரூரில் தெரிந்த நகைக்கடைகள் உள்ளன. அவா்களிடம் தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்று வருகிறோம். நீங்களும் வாங்கி விற்றால், ஒரு காசுக்கு ரூ.5,000 வரை லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தைக்கூறி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி அன்று பேபியிடமிருந்து ரூ.16.35 லட்சம் வாங்கியுள்ளனா். இதையடுத்து, கணவனும், மனைவியும் தங்கக்காசு கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனா். இதனால் விரக்தியடைந்த பேபியும், நடராஜனும் செவ்வாய்க்கிழமை கரூா் வந்து அண்ணாதுரை மற்றும் ஜெயந்தியிடம் கொடுத்த பணத்தையாவது திருப்பிக்கொடுங்கள் எனக் கேட்டுள்ளனா். ஆனால், பணத்தை தரமாட்டோம் எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். இதுதொடா்பாக பேபி கரூா் பசுபதிபாளையம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், அண்ணாதுரை மற்றும் ஜெயந்தி மீது காவல் உதவி ஆய்வாளா் சுபாஷினி வழக்குப் பதிந்து ஜெயந்தியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தாா். தலைமறைவான அண்ணாதுரையை தேடி வருகிறாா்.