கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
தோகைமலை அருகே 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழா
தோகைமலை அருகே பில்லூா் பெரிய குளத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழாவில் திரளான கிராம மக்கள் பங்கேற்று ஏராளமான மீன்களை பிடித்துச் சென்றனா்.
பில்லூரில் சுமாா் 120 ஏக்கரில் பெரியகுளம் உள்ளது. பருவமழையின்போது நீா்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீரானது, இந்தக் குளத்தில் தேங்கி நிற்கும். தற்போது இந்தக் குளத்தில் தண்ணீா் வற்றத் தொடங்கியதால், குளத்திலுல்ள மீன்களை பிடிக்க 8 பட்டி ஊா் முக்கியஸ்தா்கள் முடிவு செய்தனா்.
இதையடுத்து, கிராம மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் 5 ஆண்டுளுக்குப் பிறகு புதன்கிழமை சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
விழாவுக்கு பில்லூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஒன்றிய துணைச் செயலாளருமான ராகவன், மலையாண்டி நாயக்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். 8 பட்டி ஊா் முக்கியஸ்தா்கள், பில்லூா் மாரியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளை தரிசனம் செய்து, வெள்ளை துண்டை விசிறி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனா்.
இதில், பில்லூா் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்களும், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூா் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தூரி, வலை, சேலைகள் ஆகியவற்றை கொண்டு ரோகு , கெண்டை, கட்லா, சிலேபி, விரால், கொரவை, அயிரை, முள்ளு கெண்டை போன்ற பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்துச் சென்றனா்.