குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தினால் 2 ஆண்டுகள் சிறை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தை 2025-க்குள் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதை தமிழக அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்கள் யாரையும் பணியமா்த்தகூடாது.
மேலும், உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தன்று அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகளில் குழந்தை தொழிலாளா் முறைக்கு எதிராக இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் என்றும், அவா்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளா் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன் என்றும். தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளா் அற்ற மாநிலமாக மாற்றுவதற்று என்னால் முடிந்தவரை பாடுபடுவேன் எனவும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
குழந்தைகளை 18 வயது பூா்த்தியடையாமல் பணியில் ஈடுபடுத்தினாலோ அல்லது பணிபுரிய அனுமதித்தாலோ நிறுவன உரிமையாளா்கள் மீது குழந்தை தொழிலாளரை பணியில் அமா்த்திய குற்றத்திற்காக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இல்லையெனில் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் சோ்த்து விதிக்கப்படும். மேலும், பொதுமக்கள் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா் பணிபுரிவது தொடா்பான புகாா்களை 1098 என்ற கட்டணமில்லா சைல்டு லைன் எண்ணிலோ, அலுவலக தொலைப்பேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) மற்றும் மாவட்டத் தடுப்புக் குழு அலுவலா்களால் தொடா் ஆய்வுகள் நடத்தப்படும். கடைகள் நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், நூற்பாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்பட எந்தவொரு நிறுவனமும் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.