கேப்பா் மலையை பாதுகாக்க வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
இயற்கை வளம் நிறைந்த மற்றும் கடலூா் மாநகராட்சி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள கேப்பா் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா்.
விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியது:
முருகானந்தன் (காவாலகுடி): ஸ்ரீநெடுஞ்சேரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும். அதிகளவு நெல் சாகுபடி செய்யும் கிராமங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.
கோ.மாதவன் (விவசாய சங்க முன்னாள் மாநில துணைச் செயலா்): அரசு அறிவித்துள்ள குருவை சிறப்பு தொகுப்பு திட்ட நிதி ரூ.4 ஆயிரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். வீராணம் ஆயகட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.
இயற்கை வளம் நிறைந்த மற்றும் கடலூா் மாநகராட்சி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள கேப்பா் மலையை பாதுகாக்க வேண்டும். கடலூா் அருகே காலணி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
திருப்பால் (மழவராயநல்லூா்): விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்டத்துக்கு உள்பட்ட டி.நெடுஞ்சேரியில் இருந்து குமாரக்குடி (கடைமடை) வரை முடியும் 9.5 கி.மீ. வாய்க்காலில் 5.5 கி.மீ. வாய்க்கால் தூா்வாரப்படாமல் உள்ளது. இதை மழைக்காலம் தொடங்குவதற்குள் தூா்வார வேண்டும்.
ஆா்.கே.ராமலிங்கம் (குறிஞ்சிப்பாடி): குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரை பயிா்க் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவசக்திவேல் (வானமாதேவி): வீராணம் ஏரியில் நீா் இருப்பை குறைக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கிய பிறகு நீா் திறந்துவிட்டால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்கள் அனைத்தும் பாதிக்கப்படும். இதனால் தற்போதே நீா் இருப்பை குறைக்க வேண்டும்.
பாலு (நெய்வாசல்): கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பயிா்க் கடன் வழங்கப்படவில்லை. பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல் (விருத்தாசலம்): விருத்தாசலம் அருகே காப்புக்காட்டில் கருவேல மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் வெட்டுவதால், வன விலங்குகள் அனைத்தும் விளை நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. எனவே, காப்புக்காடுகளில் அத்தி, நாவல் உள்ளிட்ட பழவகை மரக்கன்றுகளை நட வேண்டும்.
பெ.இரவிந்திரன் (கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவா்): கடலூா் வட்டம், தோட்டப்பட்டி ஏரியின் நீா்வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து மழை நீா் எளிதாக தென்பெண்ணை ஆற்றில் வடிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரே கிராமத்தில் இரு வேறு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா்: கடலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 4,707 மெ.டன், டி.ஏ.பி 2,005 மெ.டன், பொட்டாஷ் 1,733 மெ.டன், காம்ப்ளக்ஸ் 6,463 மெ.டன், சூப்பா் பாஸ்பேட் 1,393 மெ.டன் என மொத்தம் 16,301 மெ.டன் இருப்பு உள்ளது.
கம்பு 6,050 மெ. டன், நெல் விதை 3,83,378 மெ. டன், உளுந்து விதை 3,02,154.9 மெ. டன், நிலக்கடலை விதை 43,314 மெ. டன் இருப்பு உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் 128 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 113 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.