கொடூர மரணங்களுக்கு முற்றுப்புள்ளி! ஈரானுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!
இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை மீது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், அணு ஆயுதத்துக்கு எதிரான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், வெள்ளிக்கிழமையில் மீண்டும் ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானை அழைத்த டிரம்ப், தனது வலைத்தளப் பக்கத்தில், ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது, அவர்களுக்கு வாய்ப்பும் அளித்தேன். ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு, அவர்களை நான் வற்புறுத்தினேன். இருப்பினும், அவர்களால் அதனைச் செய்ய இயலவில்லை. மேலும், உலகில் சிறந்த மற்றும் மிகவும் ஆபத்தான ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா தயாரிக்கிறது என்றும், அமெரிக்காவைவிடவும் இஸ்ரேல் அதிகளவில் தயாரிப்பதாகவும்கூட (மறைமுக எச்சரிக்கை) கூறினேன்.
என்ன நடக்கும் என்பதை அறியாமல் பேசிய சில ஈரானிய தீவிரவாதிகள், தற்போது உயிரிழந்து விட்டனர். ஏற்கெனவே பெரும் மரணங்களும், அழிவும் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டப்பட்ட தாக்குதல்கள் இருப்பதாலும், இன்னும் கொடூரமான மரணங்கள் நிகழ உள்ளன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இன்னும் நேரமும் உள்ளது.
அனைத்தும் அழிந்து, மிச்சமில்லாத ஒன்றாக ஆவதற்கு முன்பாக, அவர்கள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். முன்னொரு காலத்தில் ஈரானிய பேரரசு என்றழைக்கப்பட்ட நாட்டைக் காப்பாற்ற வேண்டும். தாமதமாவதற்கு முன்னதாக ஒப்பந்தத்தை மேற்கொள்ளுங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும் என்று தெரிவித்தார்.
ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானை டிரம்ப் அழைத்துள்ளார். ஈரானுடனான இஸ்ரேலின் போரில், அமெரிக்காவுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இஸ்ரேல் போர் குறித்து தனக்கு முன்னரே தெரியும் என்று செய்தி ஊடகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.
டிரம்ப்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நெருங்கிய நண்பர்கள் என்பது உலக நாடுகள் அறிந்ததே.
இதையும் படிக்க:கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!