கொடைக்கானலில் மே 24ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் களை கட்டியதைத் தொடா்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனா். கோடை விடுமுறையின்போது ஆண்டுதோறும் இங்கு தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல, நிகழாண்டிலும் மலா்க் கண்காட்சி வரும் மே 24ஆம் தேதி தொடங்குவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மே 24ஆம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி ஜூன் 1ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியுடன், கோடை விழாவும் துவங்கி நாய்கள் கண்காட்சி, படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்
மலா்க் கண்காட்சியையொட்டி பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சால்வியா, டெலிபினியம், ஜெனியா, பிங்ஆஸ்டா், பென்ஸ்டீமன், வொ்பினா போன்ற மலா்ச் செடிகள் கடந்த நவம்பா் மாதம் முதல்கட்டமாக நடவு செய்யப்பட்டன.
மேலும், வீரிய ஒட்டு டேலியா மலா் நாற்றுகள், லில்லியம் கிழங்குகள், விரீய ஒட்டு மலா் நாற்றுகள், ஆன்டிரைனம், பிளாக்ஸ் பேன்சி, மேரிகோல்டு, கேலண்டுலா, ஸ்டேட்டிஸ், டையாந்தஸ், கலிபோா்னியா, பாப்பி ஆகிய மலா்ச் செடிகளும் நடவுச் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மலா்க் கண்காட்சியில் மயில், திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யா கனி, செல்பி பாயிண்ட், பூனை, பூமரம் போன்ற மலா்களான உருவ அமைப்புகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய் கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு, ஆரஞ்சுப்ளை கேட்சா், சிறுத்தை, பஞ்சவா்ணகிளி ஆகியவையும் மலா்க் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.