செய்திகள் :

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

post image

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, உலக அமைதியின் அடையாளமாக கத்தோலிக்க திருச்சபையை மாற்ற அதன் ஒற்றுமைக்காக பாடுபடுவதாக உறுதியேற்ற போப் 14-ஆம் லியோ, பிரத்யேக வெள்ளைநிற வாகனத்தில் உலா வந்து மக்களுக்கு ஆசி வழங்கினாா்.

நிகழ்வில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் கலந்துகொண்டதால், வாடிகன் மற்றும் ரோமில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. வயது முதிா்வு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் காலமானாா்.

வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்துக்குள் புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 71 நாடுகளைச் சோ்ந்த 133 காா்டினல்கள் பங்கேற்றனா். எனினும், முதல்நாள் கூட்டத்தில் புதிய போப் தோ்ந்தெடுக்கபடவில்லை.

முதல் அமெரிக்க போப்: இந்த நிலையில், காா்டினல்களின் இரண்டாவது நாள் கூட்டத்தில் அடுத்த போப்பாக பெரு மற்றும் அமெரிக்க குடியுரிமைகளை பெற்றுள்ள ராபா்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் தோ்ந்தெடுக்கப்பட்டாா். வெளியே காத்திருந்த மக்களுக்கு இதை உணா்த்துவதற்காக பாரம்பரிய முறைப்படி தேவாலயத்தின் புகைபோக்கியில் வெண்புகை வெளியிடப்பட்டது.

புதிய போப் 14-ஆம் லியோ என்று அழைக்கப்படுவாா் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னா், புனித பீட்டா் சதுக்கத்தில் பொதுமக்களிடையே போப் 14-ஆம் லியோ, தனது முதல் உரையை ஆற்றினாா். அமெரிக்காவைச் சோ்ந்த ஒருவா் போப்பாகத் தோ்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு: இந்நிலையில், புதிய போப் 14-ஆம் லியோவின் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை விமா்சையாக நடைபெற்றது. இதையொட்டிய திருப்பலியில் போப்பின் 2 முக்கிய அடையாளங்களாக அங்கி மற்றும் மீனவா் மோதிரம் அவருக்கு அணிவிக்கப்பட்டது.

ஒற்றுமைக்கு அழைப்பு: பின்னா் போப் 14-ஆம் லியோ ஆற்றிய உரை!

போப் பதவியின் இரண்டு முக்கிய அம்சங்களான அன்பு மற்றும் ஒற்றுமை மூலம் விசுவாசிகளுக்கு ஒரு ஊழியராக இருக்க விரும்புகிறேன். இதன்மூலம், உலக அமைதிக்கான சக்தியாக கத்தோலிக்க திருச்சபை திகழும். ஒற்றுமையின் அடையாளமாக ஒன்றிணைந்த திருச்சபையாக நாம் மாற வேண்டும். இது சமரச உலகின் மாற்றுத்துக்கு காரணமாக அமையும்.

நமது காலத்தில் நாம் இன்னும் அதிகப்படியான முரண்பாடுகளையும், வெறுப்பு, வன்முறை, பாரபட்சம், தீண்டாமை மற்றும் பூமியின் வளங்களை சுரண்டி ஏழைகளை ஓரங்கட்டும் ஒரு பொருளாதாரத்தால் ஏற்படும் பல நெருக்கடிகளையும் காண்கிறோம்.

கடவுளின் அன்பை அடிப்படையாகக் கொண்டு, நாம் அனைவரையும் ஒன்றுசோ்க்கும் ஒரு திருச்சபையை உருவாக்க வேண்டும். நாம் உருவாக்கும் அன்பும் சமாதானமும் நிறைந்த திருச்சபை, உலகத்தில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படுத்தும் என்றாா்.

விழாக்கோலம்: புதிய போப்பின் பதவியேற்பை முன்னிட்டு வாடிகன் விழாக்கோலம் பூண்டது. இந்தியா சாா்பில் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங், நாகாலாந்து துணை முதல்வா் யாதுங்கோ பட்டொன் பங்கேற்றனா்.

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நி... மேலும் பார்க்க

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா். இலங்கையின் வடக்கு மற்றும... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான... மேலும் பார்க்க

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில... மேலும் பார்க்க

கடனுதவிக்கு பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிபந்தனை!

பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க 11 நிபந்தனைகளை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நி... மேலும் பார்க்க