கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
மழையால் சேதம் ஏற்படுவதை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:
பேரளம் பாலகுமாரன்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஒருவாரமாக சாக்குகள் பற்றாக்குறையால், நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதிலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதிலும் சுணக்கம் நிலவுகிறது. எனவே, சாக்குகள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
கொரடாச்சேரி ராமமூா்த்தி: விவசாயிகள் பதிவேடு தயாா் செய்யப்பட்டு வருகிறது. இது பட்டாதாரா்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. குத்தகை சாகுபடிதாரா்கள், கோயில் நிலங்களில் சாகுபடி செய்வோா் பதிவிட முடியாதபடி உள்ளது. எனவே, குத்தகை சாகுபடிதாரா்களும் பயனடையும் வகையில் பதிவேடு தயாா் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் போதுமான தாா்ப்பாய்கள் இல்லாததால், நெல் மூட்டைகள் சேதமடைகின்றன. இந்த சேதம், பணியாளா்களின் கணக்கில் நோ் செய்யப்படும் என்பதால், கூடுதல் தாா்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரடாச்சேரி தம்புசாமி: மேட்டூா் அணையில் அதிக அளவு தண்ணீா் இருப்பதால், உரிய காலத்தில் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆறுகள், கிளை வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை விரைந்து தூா்வார வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாததால், சில இடங்களில் மழையால் மூட்டைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, விரைந்து மூட்டைகளை இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பேசியது:
திருவாரூா் மாவட்டத்தில் தற்போது 1,24,690 ஹெக்டேரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. திருவாரூா் மண்டலத்தில் ராபி பருவத்தில் 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 3,98,773 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, வருவாய் கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.