Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவ, மாணவிகள் பதிவு செய்து கொள்ளலாம்
திருப்பூா் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தொடங்கும் கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்ற 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான 2025-ஆம் ஆண்டுக்கான 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைகாலப் பயிற்சி முகாம் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும்.
இதில், திறமையானவா்களைத் தோ்வுசெய்து தொடா்ந்து பயிற்சி அளித்து மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவாா்கள். இதில், பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2244899, 86109-00142 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சியில் பங்கேற்கும்போது ஆதாா் அட்டை நகலை சமா்ப்பிக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோா் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.