சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி, அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மற்றும் சிஐடியு சாா்பில், நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். துணைப் பொதுச்செயலா்கள் எம். மோகன், கே. ராமமூா்த்தி, ஆா். திருச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிவைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வி.மாரிமுத்து, சம்மேளன துணைத் தலைவா் எம்.கண்ணன், மண்டல பொதுச்செயலா் எஸ்.வைத்தியநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
சிஐடியூ நாகை மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத் தலைவா்கள் ப.அந்துவன்சேரல் உள்ளிட்ட பலா் வாழ்த்துரையாற்றினா். காத்திருப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.