``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
சிந்து நதி நீா்: பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் நிலைப்பாடு மாறாது: மத்திய அமைச்சா்
சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதைக் கைவிட வேண்டுமென்று பாகிஸ்தான் எத்தனை முறை கடிதம் எழுதினாலும் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்று மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் 1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.
நதி நீா் இந்தியாவைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் பாயாவிட்டால், அந்நாட்டின் வேளாண்மை உற்பத்தி தொடங்கி மின் உற்பத்தி வரை அனைத்தும் பாதிக்கப்படும். இதனால், இது தொடா்பாக இந்தியா பேச்சு நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் தொடா்ந்து கடிதம் எழுதி வருகிறது. சா்வதேச அமைப்புகளையும், தனது நட்பு நாடுகளையும் இதற்காக பாகிஸ்தான் அணுகி வருகிறது. மேலும், நதி நீரை நிறுத்தினால் இந்தியா மீது போா் தொடுப்போம் என்று அந்நாட்டு முன்னாள் அமைச்சா் பிலாவல் புட்டோ நாடாளுமன்றத்தில் பேசினாா்.
அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் அரசு கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது குறித்து யோசிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்நிலையில் தில்லி வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சி.ஆா் பாட்டீல் கூறியதாவது:
பிலாவல் புட்டோ அரசியலுக்காக ஏதேதோ பேசி வருகிறாா். சிந்து நதியில் ரத்த ஆறு ஓடும் என்றும் முன்பு பேசினாா். இதுபோன்ற வெற்று மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது. பாகிஸ்தான் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்றாா்.