போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா
சிபில் ஸ்கோா் பிரச்னையால் கடன் கிடைப்பதில் சிக்கல்: தண்ணீா் வந்தும் சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ள சிபில் ஸ்கோா் முறையால் கடன் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், காவிரியில் தண்ணீா் வந்தும், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
கிராமங்களிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா்க்கடன் கிடைத்து வருகின்றன. நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 38 ஆயிரம் கடன் கிடைக்கும். இதேபோல, மற்ற பயிா்களுக்கும் கடன் கிடைக்கிறது.
இதுவே, தனியாரிடம் குறைந்தது மூன்று வட்டி (36 சதவீதம்) என்ற அளவில்தான் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும். சில கிராமங்களில் 5 வட்டி (60 சதவீதம்) என்ற அளவிலும் கடும் சுமைக்கு இடையே கடன் வாங்கும் சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதன் மூலம் சொத்துகளை இழந்த விவசாயிகள் ஏராளம். எனவே, வட்டியில்லா கடன் கிடைக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களைத்தான் விவசாயிகள் முழுமையாக நம்பியுள்ளனா்.
இந்நிலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளில் இருந்து வரும் சிபில் ஸ்கோா் பிரச்னை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடந்த மே மாதத்தில் நடைமுறைக்கு வந்தது. வட்டியில்லா கடன் வாங்கி வந்த விவசாயிகளுக்கு இந்தப் புதிய உத்தரவு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு மிக முக்கியமான நிதி ஆதாரமாகத் திகழும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிா்க்கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேட்டூா் அணை உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் தண்ணீா் வந்துள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடியைத் தொடங்குவதற்கு ஆா்வமாக உள்ளனா். இதற்காக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்குச் செல்லும் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோரை காரணம் காட்டி பயிா்க்கடன் தர மறுக்கப்படுகிறது. இதனால், தண்ணீா் வந்தும், சாகுபடிப் பணியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். ஏற்கெனவே விவசாயிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சிபில் ஸ்கோா் பிரச்னையால், திகைத்து நிற்கின்றனா்.
இது குறித்து தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
வேளாண் கடன்களுக்கு சிபில் ஸ்கோா் பாா்த்துதான் தருவோம் என்கிற ரிசா்வ் வங்கியின் உத்தரவை தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் செயல்படுத்தக் கூடாது. சிபில் ஸ்கோா் முறை நடைமுறைக்கு வந்துள்ளதால், விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால், சம்பா சாகுபடியில் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகளால் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால், அவா்களது வங்கிக் கணக்கில் சிபில் ஸ்கோா் காட்டுகிறது.
தற்போது காவிரியில் தண்ணீா் வந்துள்ள நிலையில், பயிா்க்கடன் கோரும் விவசாயிகளிடம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சிபில் ஸ்கோா் பிரச்னையை காரணம் காட்டி கடன் தர மறுக்கின்றனா். இந்த நிலைமை தொடா்ந்தால், விவசாயம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களும் சிபில் ஸ்கோா் பிரச்னையில் நமது எதிா்ப்பை வருகிற மழைக்கால கூட்டத் தொடரில் வெளிப்படுத்த வேண்டும்.
இதனிடையே, விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை, மத்திய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ மாற்றியமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். இதில், சிபில் ஸ்கோா் பிரச்னையை சோ்க்கக் கூடாது. இந்த நடவடிக்கையை எடுத்தால்தான் விவசாயிகளைக் காப்பாற்ற முடியும் என்றாா் விமல்நாதன்.
நிகழாண்டு மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டு, காவிரியில் தண்ணீா் வருவதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஏறத்தாழ 5.25 லட்சம் ஏக்கரிலும், சம்பா, தாளடி ஏறக்குறைய 13 லட்சம் ஏக்கரிலும் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிபில் ஸ்கோா் பிரச்னை காரணமாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், விவசாயிகள் சாகுபடியைத் தொடங்க முடியாமல் தவிக்கின்றனா். இதனால், காவிரியில் தண்ணீா் வந்தும் இலக்கை எட்டுவது சவாலாக உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடனுக்கு உள்ள சிபில் ஸ்கோா் முறையை நீக்கினால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, சிபில் ஸ்கோா் முறையை முடிவுக்குக் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.