சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள்: தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; தலைமைப் பொறுப்பு வரும்
சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2025
1. இதுவரையிலும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்று ஒருவித அவஸ்தை நிலையில் இருந்தீர்கள். இந்த நிலை மாறும். காசு, பணம், மனதில் நிம்மதி எல்லாம் வாய்க்கும்.
2. குரு பகவான் லாபஸ்தானத்தில் வந்து அமர்வதால், சகல விஷயங்களிலும் நன்மை நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பார்த்தும் பார்க்காதது போன்று, விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் எல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள்.
3. வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசுக் காரியங்கள், நினைத்தபடி சீக்கிரம் நிறைவேறும். பிரபலங்களின் உதவியைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டாகும்.

4. குடும்பத்தில் கூச்சல் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் வகையில் உதவிகள் கிடைக்கும்.
5. உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். சிலருக்கு, நகை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
6. குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளால் நிம்மதியும் பெருமிதமும் உண்டாகும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். தடைகள் நீங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துக்களைக் கேட்டு வாங்குவீர்கள்.
7. உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு, விரக்தி விலகும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். எனினும் இயன்றளவுக்குப் பணத்தைச் சேமிக்கப் பாருங்கள்.
8. சொந்தபந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடும்.
9. வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்வீர்கள். கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். டிசம்பர் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடனான மனத் தாங்கல் விலகும்.

10. உத்தியோகத்தில் உங்களுக்கு எதிரான அதிகாரிக்கு இடமாற்றம் உண்டாகும். தள்ளிப்போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும்.
11. உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் கீழரோடு வழியே பயணித்தால், சுமார்5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அருளும் சிம்ம தட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் தரிசித்து, கொண்டைக் கடலைச் சுண்டல் சமர்ப்பித்து வணங்கி வாருங்கள்; நீங்கள் நினைத்தது நிறைவேறும்.