சிறு நாணய அளவிலான பேட்டரி அறிமுகம்: ஒருமுறை சார்ஜ் செய்தாலே 50 ஆண்டுகள் நீடிக்கும் திறன்!
ஒருமுறை சார்ஜ் செய்தாலே சுமார் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் வாய்ந்த புது வகையான பேட்டரியை மின்னணு பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த பீட்டாவோல்ட் நிறுவனம் அணுசக்தியால் இயங்கும் திறனுள்ள இந்த பேட்டரியை வடிவமைத்துள்ளது.
பி.வி.100 என்று அழைக்கப்படும் இந்த பேட்டரி, சரியாகச் சொல்ல வேண்டுமானால் 15 * 15 * 5 மி.மீ. அளவில் கைக்கு அடக்கமாக இருப்பது முக்கியமானதொரு சிறப்பம்சமாகும்.
நிக்கல்-63 உடன் டைமண்ட்டால்(வைரத்தால்) ஆன செமிகண்டக்டர் பொருளால் இந்த பேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது. கதிரியக்க திறனுள்ள நிக்கல்-63 ஐசோடோப்பிலிருந்து அணு ஆற்றலை இந்த பேட்டரி கிரகித்துக் கொள்கிறது.
இதனால் ஒரேயொருமுறை சார்ஜ் செய்தாலே அதன்பின் 50 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து உழைக்கும் திறன் கொண்டுள்ளது. மீண்டும் மறுசுழற்சி செய்தும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மைனஸ் 60 முதல் அதிகபட்சமாக 120 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் திறன் வாய்ந்ததாகவும் இது உள்ளது. ஆகவே எளிதில் தீப்பிடிக்காது. கடுங்குளிர் சீதோஷ்ணத்திலும் பயன்படுத்தலாம்.
ஆனால் இதிலுள்ள தற்போதைய சிக்கலானது, இதிலிருந்து மிகக் குறைந்த ஆற்றலே வெளியேற்ற முடியுமென்பதுதான். இதிலிருந்து 100 மைக்ரோவாட்ஸ் பவர் மட்டுமே 3 வோல்ட் மின்னழுத்த திறனில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் இதனை ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட அதிக ஆற்றல் தேவைப்படும் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த இயலாத நிலை இப்போதைக்கு உள்ளது. இதற்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.