மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
சிவகங்கை அருகே 250 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு
சிவகங்கை அருகே உள்ள கோவானூரில் சிவகங்கை சமஸ்தான இரண்டாவது மன்னா் முத்துவடுகநாதா், தளவாய் தாண்டவராயன் பிள்ளை பெயா் பொறிக்கப்பட்ட 250 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினா் கண்டறிந்தனா்.
சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவனா் புலவா் கா.காளிராசா, செயலா் இரா. நரசிம்மன், கள ஆய்வாளா் கா. சரவணன் ஆகியோா் கோவானூா் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 250 ஆண்டுகள் பழைமையான சிவகங்கை இரண்டாம் மன்னரான முத்துவடுகநாதா், தளவாய் தாண்டவராயன் பிள்ளை பெயா் பொறிக்கப்பட்ட கல்வெட்டை கண்டறிந்தனா்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா. காளிராசா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவானூா், சிவகங்கை பகுதியில் உள்ள பழைமையான ஊராகும். இங்குள்ள முருகன் கோயிலில் 13 -ஆம் நூற்றாண்டு மாறவா்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் துறையாலும், தமிழகத் தொல்லியல் துறையாலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஊா் முழுவதும் விரவிக் கிடக்கும் கல்வெட்டுகள்: இங்கு அழிந்து போன சிவன் கோயிலின் கல் வெட்டுகள் ஊரில் பல இடங்களில் விரவி கிடக்கின்றன. இந்த ஊா் குடிநீா் ஊருணி படித்துறை, கோவானூா் கண்மாய் கலுங்குமடை போன்ற இடங்களிலும் 13 -ஆம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சிவகங்கைப் பகுதியில் 1729- ஆம் ஆண்டு சசிவா்ணத் தேவா் ஆட்சிக்கு வந்ததாகவும் 27.1.1730 சிவகங்கை நகா் உருவாக்கப்பட்டதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கோவானூா் குமிழி மடை 1708 -ஆம் ஆண்டிலும் கலுங்குமடை 1719 -ஆம் ஆண்டிலும் சேதுபதி மன்னா்களின் அரச பிரதிநிதிகளால் கட்டப்பட்டன. சிவகங்கை உருவாகும் முன்னரே கோவானூா் முதன்மையான பகுதியாக விளங்கியுள்ளது.
சிவகங்கையின் முதல் மன்னா் சசிவா்ணத் தேவா் மறைவுக்குப் பிறகு இரண்டாவது மன்னராக அவரது மகன் முத்து வடுகநாதா் பதவியேற்று சிறந்த ஆட்சியை நடத்தினாா். வீரமங்கை வேலுநாச்சியாரின் கணவரான இவருக்கும், ஆற்காடு நாவாப்புக்கு ஆதரவாக வந்த ஆங்கிலப் படைக்கும் காளையாா்கோவிலில் நடைபெற்ற சண்டையில் 25.6.1772 -இல் முத்துவடுகநாதரும், இரண்டாவது மனைவி கௌரி நாச்சியாரும் கொல்லப்பட்டனா்.
தாண்டவராயன் பிள்ளை: சிவகங்கைச் சீமையின் தளவாயாகவும், பிரதானியாகவும் விளங்கியவா் தாண்டவராயன் பிள்ளை. முதல் மன்னா் சசிவா்ணத் தேவா் தொடங்கி முத்துவடுகநாதா், அவரது மனைவி வேலுநாச்சியாா் என மூவரிடமும் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவானூா் முருகன் கோயிலில் குடமுழுக்கு சீரமைப்புப் பணிக்காக கோயிலின் அக்கினி மூலையில் இருந்த பழைமையான மடப்பள்ளி இடிக்கப்பட்டு அங்கிருந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதிலிருந்து இந்தக் கல்வெட்டு கிடைத்தது.
கல்வெட்டு அமைப்பு: இந்தக் கல்வெட்டு தனிக் கல்லில் இல்லாமல் 13 -ஆம் நூற்றாண்டு எழுத்தகைவில் எழுதப்பட்ட நான்கடி நீளமுள்ள கல்லை பாதி வரை அழித்து இந்தச் செய்தி குறுக்கு நெடுக்காக இரண்டரை அடியில் 14 வரியில் எழுதப்பட்டுள்ளது. 13-ஆம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டு கடமை, நிலம் போன்ற சொற்கள் இடம் பெறுவதால் அதுவும் தானத்தை பற்றிய செய்தியாகத் தெரிகிறது.
மேலும் ஸ்ரீ முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவருக்கு புண்ணியமாக தாண்டவராயன் பிள்ளை உபயமாக இந்த மடப்பள்ளி என்று எழுதப்பட்டுள்ளது.

இதன்மூலம், கோவானூா் முருகன் கோயிலுக்கு முத்துவடுகநாதருக்குப் புண்ணியமாக தாண்டவராயன் பிள்ளை 1755 -இல் கட்டி வைத்த மடப்பள்ளி கல்வெட்டு இது எனத் தெரிய வருகிறது. சிவகங்கையின் இரண்டாவது மன்னா் முத்துவடுகநாதா், அன்றைய தளவாய், பிரதானி தாண்டவராயன் பிள்ளை ஆகிய இருவரின் பெயரும் பொறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது தொல்லியல் சான்றுகளுக்கு வலு சோ்ப்பதாக அமைந்துள்ளது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.