சிவகாசி சந்தையில் கூடுதல் இடம் ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம்
சிவகாசி மாநகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளைத் தவிர கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பொருள்களை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி மாநகராட்சி தினசரி காய்கறி சந்தையில் காலை 7 மணிக்குள் சரக்குகளை இறக்கி முடித்து கனரக வாகனங்கள் சந்தையை விட்டு, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி வெளியேறி விட வேண்டும். தவறும் பட்சத்தில் காவல், வருவாய்த் துறையினா் உதவியுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
சந்தையில் ஒப்பந்தப்புள்ளி பெற்று வியாபாரம் செய்பவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைக் தவிர கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொருள்களை வைத்திருந்தால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். இதை மீறுபவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவன் கோயிலருகே மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள வாகனக் காப்பகத்தில் மட்டுமே இரு சக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.