வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்
சிவசேனா தொடக்கத் தினம்: "என்னை வந்து சாகடியுங்கள்" - வார்த்தை போரில் உத்தவ் - ஷிண்டே; பின்னணி என்ன?
மகாராஷ்டிராவில் சிவசேனா தொடக்கத் தினம் சிவசேனாவின் இரண்டு அணிகள் சார்பாகக் கொண்டாடப்பட்டது.
தனித்தனியாக நடந்த பொதுக்கூட்டங்களில் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சயான் சண்முகானந்தா ஹாலில் நடந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, ''மகாராஷ்டிரா அரசியலிலிருந்து தாக்கரே பிராண்டை அழிக்க பாஜகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் முயற்சி செய்கின்றன.
நான் எதிரிகள் முன்னிலையில் நிற்கிறேன். வாருங்கள் வந்து என்னைச் சாகடியுங்கள். மராத்தி பெருமையையும், சிவசேனாவின் மதிப்புகளையும் தகர்க்கும் பாஜகவின் திட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே ஒரு பகடைக்காயாக இருக்கிறார்.

மும்பையின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்க இன்று நாம் ஒன்றுபட்டால், இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியும். அது நடக்குமா? உங்கள் மனதிலும் மகாராஷ்டிரா மக்களின் மனதில் உள்ளதையும் நான் செய்வேன்.
ஆனால் இந்த முயற்சியைத் தடுக்க பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. சமீபத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாந்த்ராவில் உள்ள ஹோட்டலில் ராஜ்தாக்கரேயைச் சந்தித்து பேசினார்.
எங்களது கட்சி தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறது. நாங்கள் மும்பையில் வெற்றி பெற்றால் அதானிக்கு அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மராத்தி மக்களைப் பிரிக்க முயல்கிறார்கள். ஆனால் நாங்கள் எந்த விலை கொடுத்தாவது மும்பையை மீட்டெடுப்போம்” என்று அவர் கூறினார்.
சிவசேனா (ஷிண்டே) கட்சியின் தொடங்க நாள் விழாவைக் கொண்டாடுவது குறித்துக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே அது திருடர்களின் கூட்டம் என்று விமர்சித்தார்.
சமீபத்தில் முன்னாள் கிரிமினல் ஒருவர் பா.ஜ.கவின் இணைந்தது குறித்துப் பேசிய உத்தவ் தாக்கரே, "நீங்கள்(பாஜக) என்ன சிறைக்கு வெளியில் கடை வைத்திருக்கிறீர்களா? அடுத்து தாவூத் இப்ராகிம் உங்கள் கட்சியில் சேருவாரா?" என்றும் உத்தவ் தாக்கரே பாஜகவை விமர்சித்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த உத்தவ் தாக்கரே, "நீங்கள் உள்துறை அமைச்சரா அல்லது வீட்டைப் பிரிப்பவரா? மகாராஷ்டிராவில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க மாட்டோம். குஜராத்தில் முதலில் இந்தியை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேயின் பேச்சு ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதையே காட்டுகிறது. தனது பேச்சு மூலம் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயின் கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதை உத்தவ் தாக்கரே சூசகமாக அறிவித்தார்.
உத்தவ் தாக்கரேயிக்கு ஏக்நாத் ஷிண்டேயும் பதிலடி கொடுத்துள்ளார். ஒர்லியில் நடந்த கட்சியின் தொடக்க நாள் கூட்டத்தில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, ''உத்தவ் ஒரு அரசியல் துரோகி. அதிகாரத்திற்காக பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளைக் கைவிட்டு விட்டார்.
அவர் (உத்தவ்) சாகடியுங்கள் என்று சொல்கிறார். அரசியல் ரீதியான ஏற்கனவே செத்து போனவர்களை மீண்டும் எப்படிச் சாகடிப்பது'' என்று சட்டமன்றத் தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் பேசிய அவர், நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறிக் கொண்ட ஷிண்டே, "நாங்கள் யாரையும் தூண்டிவிடுவதில்லை, ஆனால் தூண்டிவிடப்பட்டால், யாரையும் விடமாட்டோம்" என்று கூறினார்.
"மகா விகாஸ் அகாதி கூட்டணி மூலம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியுடன் கைகோர்த்து இந்துத்துவா கொள்கையை உத்தவ் தாக்கரே கைவிட்டார். பாலாசாகேப் உயிருடன் இருந்திருந்தால், அத்தகைய துரோகத்திற்காக உத்தவ்வை அவர் தண்டித்திருப்பார்" என்று ஷிண்டே தெரிவித்தார்.