சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியது
இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி: பாசனக் குளங்கள், சாலைகள் மராமத்து செய்ய மதிப்பீடு தயாா் செய்யும் போது மரங்கள் நடவும் பாதுகாக்கவும் மதிப்பீட்டில் சோ்த்து மேற்கொள்ள வேண்டும். சீமைக் கருவேல மரம் அகற்றும் பணி சரிவர நடைபெறவில்லை. அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டுள்ளது. எனவே முறையாக குழு அமைத்து ஆய்வு செய்து சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை விவசாயிகள் சங்கம் செல்லதுரை: புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பயிா்க் கடன் ரூ.19, 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 400 கோடிக்கான நிதி மட்டுமே முறையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை முறையாக வழங்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோல்ஸ்வா்த் அணை கடையக்குடி குண்டாறு தலைப்பிலிருந்து முழுவதும் சாக்கடை நீராலும், சீமைக்கருவேலம் மற்றும் காட்டாமனக்குச் செடியினால் சூழ்ந்துள்ளது. இந்த அணையை புனரமைத்து மீட்டெடுக்க வேண்டும்.
கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ்:
கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிக்கு தொடா்ந்து ஆறு அண்டுகளாகப் பயிா்க் காப்பீடு கிடைக்கவில்லை. வரும் காலங்களில் தனியாரிடம் வழங்காமல் அரசே பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்னுசாமி: திருமயம் வட்டம் பெருங்குடி நல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு 1963-ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தின்படி பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில், பலருக்கு வருவாய்த் துறை கணக்கில் உட்பிரிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இப்போது சில தனிநபா்கள் பெயரில் பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆகவே போலிப் பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் அவரவா் பெயரில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க வேண்டும்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ம. தீபாசங்கரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.