சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளரை தற்கொலைக்கு தூண்டியது யார் யார்? - பகீர் சம்...
சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை: மத்திய அரசுக்கு அப்பாவு கண்டனம்
நெல்லை: தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும் ரூ.276 கோடி தள்ளுபடி செய்யாத மத்திய அரசுக்கு பேரவைத் தலைவர் அப்பாவு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில், அரசுப் பேருந்துகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல சுங்கச்சாவடிகள் காலம் கடந்தும் இயங்கி வருகின்றன, 16 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனாகத் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, போக்குவரத்து கழகப் பேருந்துகள் செல்வதற்குத் தேவைப்படும் 276 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய மாட்டாரா? என்று அப்பாவு கேள்வி எழுப்பினார்.
மேலும், கல்வித்துறையில் மத்திய அரசு தமிழகத்திற்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக அப்பாவு குற்றம் சாட்டினார். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு கல்வியை அழித்து, குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அப்பாவு, உலகிலேயே ரேஷன் பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்தைச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று பெருமிதத்துடன் கூறினார்.
இருப்பினும், தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட் பணிகளில் ஒரு இடத்தில் கூட தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை என்று அவர் வேதனை தெரிவித்தார். தமிழே தெரியாதவர்களைத் தமிழ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாகத் தேர்வு செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.