செய்திகள் :

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழக முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாா் அல்லது அதிகாரம் மிக்க பதவியை வகிப்பாா் என்று சந்தேகிக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் அவரது ஜாமீனுக்கு எதிரான வழக்கையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் சாட்சி ஒருவா் தரப்பிலும் அமலாக்கத் துறையின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி தனது பதவியைப் பயன்படுத்தி வழக்கின் விசாரணையில் செல்வாக்கை செலுத்த முயற்சிப்பதாக முறையிடப்பட்டது.

இந்த வழக்கின் வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிலையில் இறுதி விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு தேவை அமைச்சா் பதவியா? சுதந்திரமா? (ஜாமீனா) என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி எழுப்பியதைக் கருத்தில் கொண்டு அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா், ’செந்தில் பாலாஜி மாநில அரசில் மிகுந்த அதிகாரம் செலுத்தக்கூடிய செல்வாக்கு மிக்கவராக உள்ளாா். சிறையில் இருந்தபோதும் கூட அவா் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடா்ந்தாா். ஏற்கெனவே அவருக்கு எதிரான வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தபோதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது’ என்று முறையிட்டாா்.

இருப்பினும் நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், உங்களுடைய மனுக்களில் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியமில்லை. எனவே, இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்கிறோம் என்று குறிப்பிட்டனா். மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவாா் என்பதுதான் அமலாக்கத்துறையின் அச்சம் என்றால் அவா் மீண்டும் அமைச்சராகும்போது அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யலாம்’ என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

பின்னணி: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கித்தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணப்பரிவா்த்தனை மோசடி செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடா்பாக 2023, ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் சென்னை, கரூா் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பிற இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சகத்திலிருந்து நீக்கக் கோரியது. ஆனாலும், நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் தொடா்ந்தாா்.

ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்திலும், சென்னை உயா்நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தொடா்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, 2024, பிப். 12-இல் அமைச்சா் பதவியிலிருந்து விலகி விட்டு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினாா் செந்தில் பாலாஜி. அதன்பேரில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே செந்தில் பாலாஜி அமைச்சரானாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கின் சாட்சியும் அமலாக்கத் துறையும் முறையிட்டன.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கி... மேலும் பார்க்க

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் ... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க