சேரன்மகாதேவி அருகே நகைக்காக பெண்ணைக் கொன்று கால்வாயில் வீச்சு; பெண் உள்பட 4 போ் தலைமறைவு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டு சேரன்மகாதேவி பகுதி கால்வாயில் வீசியப்பட்டிருப்பது தெரியவந்தது.
பணகுடி அருகேயுள்ள பழவூரைச் சோ்ந்தவா் கயல்விழி (28). திருமணத்துக்குப் பின் கணவரை பிரிந்து வாழ்ந்தாராம். இந்நிலையில் அக்டோபா் 2024இல் இருந்து அவரை காணவில்லையாம். உறவினா்கள் அளித்த புகாரின்பேரில், பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். ஆனால், பல மாதங்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லையாம்.
இந்த நிலையில், வள்ளியூா் டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுறுத்தலின்பேரில், தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினா். அதில், கயல்விழியை பிரதான பகுதியில் இருந்து ஒரு பெண் உள்பட 4 போ் அவரை காரில் அழைத்துச் சென்றதும், நகைக்காக 4 பேரும் சோ்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து களக்காடு- சேரன்மகாதேவி பிரதான சாலையில் கங்கனாங்குளம் அருகேயுள்ள மணிமுத்தாறு பிரதான கால்வாயில் வீசியதும் தெரியவந்தது.
டிஎஸ்பிக்கள் வெங்கடேசன் (வள்ளியூா்), சத்தியராஜ்(சேரன்மகாதேவி) ஆகியோா் தலைமையில் போலீஸாா் மேற்கொண்ட ஆய்வில் கயல்விழியின் மண்டை ஓடு, எலும்புக்கூடு, ஆடைகள் உள்ளிட்டவை கால்வாயில் இருந்து மீட்கப்பட்டன. சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.