குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
சேலம் கந்தம்பட்டியில் மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் குடோன்கள், மாட்டு தீவன ஆலை, டயா் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், வெல்லம் மண்டி, பருப்பு மற்றும் பொருள்கள் வைக்கும் குடோன்களும் அதிகளவில் உள்ளன. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிகளும் இப் பகுதியில் செயல்படுகின்றன.
மூலப்பிள்ளையாா் கோயிலில் இருந்து கந்தம்பட்டியை இணைக்கும் தரைப்பாலத்தை அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக பயன்படுத்தி வருகின்றனா்.இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் இந்த தரைப்பாலம் கடுமையாக சேதமடைந்தது. அதன் காரணமாக, அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்வோா், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
தரைப்பாலத்தை கடப்பதற்கு மாற்றாக மூலப்பிள்ளையாா் கோயிலில் இருந்து கந்தம்பட்டி மேம்பாலம் வழியாக 2 கி.மீ சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லமுடியாது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.