ஜார்க்கண்டில் கனமழை, வெள்ளம்! 10 பேர் பலி...களம் இறங்கியது தேசிய படை!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் 10 பேர் பலியாகியுள்ளனர்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் கடந்த 48 மணிநேரத்துக்கும் மேலாகத் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் மூழ்கியுள்ளன.
ஜார்க்கண்டின் முக்கிய நகரங்களான, ராஞ்சி, ஹசாரிபாக், ராம்கார், ஜம்ஷெத்பூர், சத்ரா மற்றும் சிம்டேகா ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும், அங்கிருந்த ஏராளமான பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகள் சரிந்ததாகவும், மின்னல் பாய்ந்ததாகவும் மற்றும் சாலை விபத்துகள் என 20-க்கும் மேற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதுபோன்ற, சம்பவங்களில் 10 பேர் பலியான நிலையில்; 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் அம்மாநிலத்தின் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் மூழ்கியுள்ளன. இதனால், அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களம் இறங்கியுள்ளனர்.
மாநிலம் முழுவதுமுள்ள பல ஆறுகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 18) ராஞ்சி, லோஹர்தாகா, சிம்தேகா, குந்தி மற்றும் கும்லா ஆகிய நகரங்களுக்கு மாநில அரசு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. மேலும், ராம்கார், கோடெர்மா, சத்ரா, பலாமு மற்றும் கர்ஹ்வா ஆகிய இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கனமழை அடுத்த சில நாள்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் ஜூன் 20 ஆம் தேதி வரை மக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தலைநகர் ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!