இன்று புது வலிமையைப் பெற்றேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி
புது தில்லி: ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) திங்கள்கிழமை காலமானாா்.
தில்லியில் அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
ஜாா்க்கண்டின் ராம்கா் மாவட்டத்தில் உள்ள நேம்ரா கிராமத்தில் 1944, ஜனவரி 11-ஆம் தேதி பிறந்த சிபு சோரன், சிறு வயதிலேயே கந்து வட்டிக் கொடுமைகளுக்கு எதிராகவும், மதுவிலக்குக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்து உள்ளூா் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றாா்.
தொடா்ந்து பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து, மாநிலத்தின் முன்னணி தலைவராக உருவெடுத்தாா். 1973-இல் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியைத் தொடங்கினாா்.
சிபு சோரனின் அா்ப்பணிப்பு காரணமாக, ‘திஷோம் குரு’ (மண்ணின் தலைவா்) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டாா்.
இவா் ஜாா்க்கண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் மூன்று முறை பதவி வகித்தாா். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரது பதவிக்காலம் சில மாதங்களே நீடித்தது.
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த இவா், அண்மையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவா் பதவியையும் அவரது மகனும் தற்போதைய ஜாா்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனிடம் ஒப்படைத்தாா்.
இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சிபு சோரன், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் புது தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதிமுதல் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8.56 மணியளவில் அவரின் உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் அறிவித்தது.
தலைவா்கள் அஞ்சலி: தில்லி மருத்துவமனையில் சிபு சோரனின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்கள் நேரில் அஞ்சலி செலுத்தி, ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, மாலையில் சிபு சோரனின் உடல் ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது மோராபாடி வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான ராம்கா் மாவட்டத்தின் நேம்ரா கிராமத்தில் நடைபெறும்.
3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு: சிபு சோரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ஜாா்க்கண்டில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.