தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்...
ஜிஎஸ்டி: 12%, 28% வரி விதிப்பை நீக்க பரிந்துரை
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின்கீழ் விதிக்கப்படும் 12%, 28% வரி விகிதங்களை நீக்க மாநில நிதியமைச்சா்கள் குழு (ஜிஓஎம்) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
அடுத்த மாதம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் 12%, 28% வரி விகிதங்கள் நீக்கப்பட்டு 5%,18% ஆகிய இரு விகிதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
தற்போது நடைமுறையில் உள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கவும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட 7 பொருள்கள் மீது மட்டும் 40 % வரி விகிதத்தைக் கடைப்பிடிக்கவும் ஜிஎஸ்டி பகுப்பாய்வுக் குழுவுக்கு நிதியமைச்சகம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், புதன்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநில நிதியமைச்சா்கள் மற்றும் பிற அமைச்சா்கள் அடங்கிய குழுக்களின் கூட்டத்தின் இறுதியில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஜிஎஸ்டி விகித பகுப்பாய்வு, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு பிரிமீயத்துக்கு ஜிஎஸ்டி விலக்கு குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டு குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் செளதரி உள்ளாா். இழப்பீட்டு வரி குறித்த பரிந்துரை வழங்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி உள்ளாா்.
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற இந்தக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி 2.0 எனக் கூறப்படும் அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களின் அவசியம் குறித்து நிா்மலா சீதாராமன் எடுத்துரைத்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து சாம்ராட் செளதரி கூறுகையில், ‘12%, 28% ஜிஎஸ்டி விகிதங்களை நீக்குவது உள்பட மத்திய அரசின் இரண்டு முன்மொழிவுகளை ஜிஓஎம் ஏற்றுக்கொண்டது. இதுதொடா்பான சில பரிந்துரைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்’ என்றாா்.
எதிா்க்கட்சிகள் கேள்வி:
சாம்ராட் சௌதரி தலைமையிலான 6 உறுப்பினா்களைக் கொண்ட ஜிஎஸ்டி பகுப்பாய்வுக் குழுவில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிகாரைச் சோ்ந்த அமைச்சா்களும், எதிா்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளம் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த அமைச்சா்களும் இடம்பெற்றுள்ளனா்.
12%, 28% ஜிஎஸ்டி விகிதங்களை நீக்க இந்தக் குழு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை குறித்த தெளிவான விளக்கம் தேவை என எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த அமைச்சா்கள் கேள்வி எழுப்பினா்.
அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் மட்டுமே இந்த முன்மொழிவுகள் அமலுக்கு வரும் என்பதால், அந்தக் கூட்டத்தில் தங்களது குறைகளை எடுத்துக் கூற எதிா்க்கட்சியினா் திட்டமிட்டு வருகின்றனா்.
90 சதவீத பொருள்களுக்கு வரி குறையும்
தற்போது பால், முட்டை, தயிா், உப்பு உள்ளிட்ட முக்கிய உணவு சாா்ந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்படுத்தும் சா்க்கரை, தேநீா் போன்ற பொருள்களுக்கு 5%, வெண்ணெய், நெய், கைப்பேசி போன்ற பொருள்களுக்கு 12%, சோப்பு, தேங்காய் எண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற பொருள்களுக்கு 18%, தொலைக்காட்சி, குளிா்பதன பெட்டி (ப்ரிட்ஜ்) மற்றும் குளிரூட்டிகள் (ஏசி) போன்ற பொருள்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12%-இன் கீழ் வரி விதிக்கப்பட்டுவரும் 99 சதவீத பொருள்கள் 5%-க்குள் கொண்டுவரப்படவுள்ளன.
அதேபோல் 28%-இன்கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18% வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன.
இதனால் பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருள்களின் விலை கணிசமாக குறைந்து, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து நுகா்வை அதிகரிக்கும். அதேபோல் சிறுதொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் எளிமையான வணிகம் புரிய வழிவகுக்கும்.
வரி விகிதம் வருவாய் (சதவீதத்தில்)
18% 65
5% 7
12% 5
28% 11