தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை
அண்மை நாள்களாக, ஜிப்லி செய்யறிவு கலை மூலம் தங்களது புகைப்படங்களை மாற்றி அந்த ஜிப்லி புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், நிச்சயமாக ஜிப்லி புகைப்படங்கள் வேண்டுமா என்று சிந்திக்குமாறும், தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பதிவில்,
ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள்.
ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது முகங்கள், உணர்வுகள், வெளிப்புறங்கள் என அனைத்தையும் பதிவு செய்துகொள்கிறது. இதனைக் கொண்டு பயனாளரின் ஒப்புதல் இல்லாமலே, செய்யறிவுக்கு உணர்வுகள், முகப்பாவம் குறித்து பயிற்சி அளிக்கப்படலாம்.
மேலும், ஒரு புகைப்படத்தைக் கொடுத்துவிட்டால், அதனை டெலீட் செய்யும் வாய்ப்பும் இல்லை.
மக்கள் எடுக்கும் ஜிப்லி புகைப்படங்கள், பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களிலும் புழங்குகிறது. இதன் மூலம், ஒருவர் சைபர் குற்றவாளிகளுக்கு இரையாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில இணையதளங்களில் ஜிப்லி தொழில்நுட்பத்தை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் பதிவேற்றும் புகைப்படங்கள் டீப் ஃபேக் புகைப்படங்களாக மாற்றப்பட்டால் என்னவாகும்?
அது மட்டுமல்லாமல், ஜிப்லி தொழில்நுட்பம் என்று வரும் மோசடியாளர்களின் லிங்குகளை கிளிக் செய்து ஏமாறும் அபாயமும் இருப்பதால், கண்டிப்பாக ஜிப்லி புகைப்படம் வேண்டுமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.