ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு
உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
முழுமையாக ஆய்வு மேற்கொள்ளாமல் ஞானவாபி மசூதி குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வர முடியாது என்பதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹிந்துக்கள் தரப்பு வழக்குரைஞா் மதன்மோகன் யாதவ் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை கடந்தாண்டு டிசம்பா் 18-ஆம் தேதி தொல்லியல் துறை சமா்ப்பித்தது. அதன்பின்பு கடந்த ஜனவரியில் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, அந்த நிலவறை திறக்கப்பட்டு ஹிந்து தெய்வங்களுக்கு பூஜை செய்வது தொடங்கியது.
இந்நிலையில், ஞானவாபி மசூதியில் அகழாய்வு செய்து விரைந்து பணிகளை முடிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிபதி யூகூல் சாம்பு, ‘மசூதியின் வளாகத்தில் ஆய்வு நடத்தவோ அல்லது பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என அலகாபாத் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. எனவே இந்த மனு நிராகரிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டாா்.
இது நீதிக்கு கிடைத்த வெற்றி என முஸ்லிம்கள் தரப்பு தெரிவித்துள்ளது.