டெஸ்ட் கேப்டன் பொறுப்பை நிராகரித்த பும்ரா..! என்ன நடந்தது?
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தான் நிராகரித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி விலகியதால் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வானார்.
வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாகுவார் எனப் பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் உடனான ஸ்கை ஸ்போர்ட்ஸ் நேர்காணலில் பங்கேற்ற பும்ரா இதற்கு விளக்கமளித்துள்ளார். பும்ரா கூறியதாவது:
ஐபிஎல் தொடரின்போது ரோஹித், கோலி ஓய்வுக்கு முன்பாக நான் எனது வேலைப் பழு குறித்தும் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் குறித்தும் பிசிசிஐ-யிடம் பேசினேன்.
எனது முதுகு குறித்து அடிக்கடி எனது அறுவைச் சிகிச்சை நிபணரிடமும் தொடர்ந்து பேசிவருகிறேன். இந்தச் சில காரணங்களினால் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அதனால், தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டாமென பிசிசிஐ-யிடம் தெரிவித்தேன்.
என்னை கேப்டனாக்க பிசிசிஐ விரும்பியது. நான் வேண்டாமென்று கூற காரணம் 5 டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாடுவேனா தெரியாது.
2,3 போட்டிக்குப் பின்பு பாதியில் வேறு யாராவது அணியை வழிநடத்துவது சரியாக இருக்காது. அணிக்கு அது நல்லதல்ல. நான் எப்போதுமே அணிக்கு முதலிடம் கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.