Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: முதல்வா் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது
பெங்களூரு கூட்டநெரிசல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் கைது செய்யப்பட்டனா்.
பெங்களூரு, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4 ஆம் தேதி நடந்த ஆா்சிபி அணியின் ஐபிஎல் கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசா் ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும், சிஐடி விசாரணைக்கும் கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோா் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் செவ்வாய்க்கிழமை பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா பேசுகையில், ‘முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் மக்களிடையே தங்கள் செல்வாக்கை உயா்த்திக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இதற்கு தாா்மிக பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோா் தங்களது பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் அவா்கள் வீடுகளின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்’ என்றாா்.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் பேசுகையில், ‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்றது மாநில அரசா? அல்லது ஆா்சிபி அணியா? இந்த விழாவுக்கு ஆளுநா் தாவா்சந்த்கெலாட்டை முதல்வா் சித்தராமையாவே அழைத்திருக்கிறாா். தெலங்கானா மாநிலத்தில் நடந்த கூட்டநெரிசல் சம்பவத்திற்காக நடிகா் அல்லு அா்ஜுன் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். அக்டோபா் மாதத்தில் கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கவிழும். முதல்வா் பதவியை அடைவதற்காக காங்கிரஸ் கட்சியில் கடும் போட்டி நிலவி வருகிறது’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, குமாரகுருபா சாலையில் உள்ள முதல்வா் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிடுவதற்காக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா உள்ளிட்டோா் சென்றனா். அப்போது, அவா்களை தடுத்துநிறுத்திய போலீஸாா், முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றனா். இதனால் பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தடையை மீறி, முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி உள்ளிட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
போராட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் அஸ்வத்நாராயணா, கோபாலையா, கோவிந்த்காா்ஜோள், எம்.பி. பி.சி.மோகன், எம்எல்ஏக்கள் சுனில்குமாா், என்.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ராஜிநாமா கேட்க பாஜகவுக்கு தாா்மிக உரிமையில்லை
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் என்னை ராஜிநாமா செய்யுமாறுகூற பாஜகவுக்கு தாா்மிக உரிமை இல்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரில் ஆா்சிபி கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்த சம்பவத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் சித்தராமையா, 2002 இல் குஜராத் மாநிலம், கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்துக்கு யாா் பொறுப்பு? 2022 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மோா்பில் 140 போ் உயிரிழக்க காரணமாக இருந்த நடைப்பாலம் இடிந்து விழுந்ததற்கு யாா் பொறுப்பு? என்னை தற்காத்து கொள்வதற்காக இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டவில்லை.
எனது ராஜிநாமாவை கேட்பதற்கு பாஜகவினருக்கு எவ்வித தாா்மிக உரிமையும் இல்லை. கும்பமேளாவின்போது நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்துக்காக உத்தரபிரதேச மாநில முதல்வா் ராஜிநாமா செய்யுமாறு கா்நாடக பாஜகவினா் வலியுறுத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பாஜகவினா் போராட்டம் நடத்தியுள்ளனா்’ என்றாா்.