Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்
நமது சிறப்பு நிருபர்
கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்துள்ளது.
தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணா நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள்கள் தேசிய இயக்கத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இதே பிரிவின் தில்லி அலுவலகத்தில் இருந்து கிரேட்டர் நொய்டா அலுவலகத்துக்கு அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.
அமர்நாத் வகித்து வந்த தொன்மைப் பிரிவு இயக்குநர் பதவி, தொல்லியல் துறை தலைமையகத்தில் அகழ்வாராய்ச்சிப் பிரிவை கவனித்து வரும் ஹெச்.ஏ. நாயக் என்ற அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2015-2017 ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான பொருள்கள், சுட்ட செங்கற்களால் ஆன கட்டமைப்புகள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டப் பொருள்கள், தங்க ஆபரணங்கள், மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
இவை பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.
பல கட்டங்களாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட வேளையில், அமர்நாத் ராமகிருஷ்ணா கோவா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர், 2021-இல் தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மூத்த கண்காணிப்பாளராக அமர்நாத் பணியாற்றினார்.
மூன்று ஆண்டு பணிக் காலத்தை நிறைவு செய்யும் முன்பே 2023-ஆம் ஆண்டில் அமர்நாத் தில்லிக்கு பதவி உயர்வு அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கிருந்து தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவரது குழு மேற்கொண்ட அகழாய்வின் இடைக்கால ஆய்வறிக்கை 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளிலும், அவற்றின் இறுதிப்படுத்தப்பட்ட 982 பக்க அறிக்கை 2023, ஜனவரியிலும் தொல்லியல் துறை தலைமையிடம் அளிக்கப்பட்டது. அவற்றைப் பரிசீலித்த தொல்லியல் துறை, அமர்நாத்தின் அறிக்கையை மேலும் அறிவியல்பூர்வ தரவுகளுடன் இணைத்துத் திருத்தி அனுப்புமாறு அண்மையில் கேட்டுக்கொண்டது.
ஆனால், ஏற்கெனவே உரிய தரவுகளுடனும் களத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் உரிய பரிசோதனைகள் அடிப்படையிலும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதால் அதைத் திருத்த வேண்டிய அவசியமில்லை என்று அமர்நாத் ராமகிருஷ்ணா பதிலளித்ததாகத் தெரிகிறது.